மத்திய அரசு வைக்கும் ஒரு செங்கல்லை கொண்டு உதயநிதி மற்றொரு கோட்டையை கட்டி விடுவார்

கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன். ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.
மத்திய அரசு வைக்கும் ஒரு செங்கல்லை கொண்டு உதயநிதி மற்றொரு கோட்டையை கட்டி விடுவார்
Published on

கோவை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், கோவையில் முகாமிட்டு கடந்த 3 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று இரவு அவர் கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராஜவீதியில் பிரசாரம் செய்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எனக்கு தோல்வி என்றார்கள். கையில் பணமின்றி மக்களின் அன்பை மட்டுமே முதலீடாக வைத்து கிடைத்த வாக்கை நான் தோல்வியாக பார்க்கவில்லை.

காமராஜருக்கு தோல்வி கிடையாது. அவர் தோற்றாலும் அவரின் ஆட்சியை பின்பற்றுவதாக கூறிய கட்சிகள் ஏராளம். நான் கருணாநிதியிடம் கற்றுக் கொண்டவன். பெரியாரின் சீடன். என்னிடம் தோல்வியை காட்டி பயமுறுத்த முடியாது. மக்கள் தலைநிமிர்ந்து நடமாடும் இந்த ராஜவீதியில் நான் நடந்து இருக்கிறேன். மீண்டும் நடப்பேன்.

இப்போது நாம் எடுத்து இருக்கும் பாதை நாட்டிற்கானது. கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன். அது மக்கள் தலையில் விழுந்த இடி. 70 கோடி மக்களின் சொத்தை 21 நபர்களின் கையில் கொண்டு சேர்த்தது பாரதிய ஜனதா அரசு. அதை பகிரங்கமாக கேட்டவன் நான்.

தன் வீட்டை நாட்டுக்கு எழுதிக் கொடுத்த நேரு வாழ்ந்த நாடு இது. தமிழத்துக்கு நீதி கேட்டால் ஏற்கனவே கொடுத்தது பிச்சை என்று கூறுகிறார்கள். ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

கடந்த 75 ஆண்டுகளாக நாம் போட்ட உரத்தால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வரி செலுத்தாத பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு நிதியை அள்ளி கொடுக்குறீர்கள். அங்கும் முன்னேற்றம் இல்லை. அங்கிருந்து இங்கு வேலைக்கு வருகிறார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செங்கல்லை எடுத்து காட்டினால் உங்களுக்கு கோபம் வருகிறது. மத்திய அரசு ஒவ்வொரு ஊரிலும் செங்கல்லை மட்டும் வைத்து செல்கிறது. அதை உதயநிதி ஸ்டாலின் இன்னொரு கோட்டையை உருவாக்கி விடுவார்.

பாராளுமன்றத்தில் தமிழனுக்கான குரல் கேட்க வேண்டும். இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். உலகிலேயே சக்தி வாய்ந்த தேர்தல் இந்தியாவில் தற்போது நடக்கின்ற தேர்தல் தான். எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. சனாதனத்தை நாம் அனுமதிக்க கூடாது. திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்கும் தொடர வேண்டும். சுயமரியாதையை காக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com