ஜெயக்குமார் வழக்கு- சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை

ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் நாளன்று 5 மணி நேரம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் விபரம் எடுக்கப்பட்டுள்ளது.இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளின் விபரங்களை கேட்டறிந்துள்ளார்.
ஜெயக்குமார் வழக்கு- சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை
Published on

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பல ஏக்கர் நிலப்பரப்பை பல கிலோ மீட்டர்களுக்கு துல்லியமாக ஆராய்ந்து முப்பரிமாணத்தில் படம் எடுத்துக் கொடுக்கும் திறன் கொண்ட முப்பரிமாண 3-டி லேசர் ஸ்கேனர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த கேமராவை பயன்படுத்தி ஜெயக்குமார் தோட்டத்தின் 7 ஏக்கர் நிலப்பரப்பையும் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தனர்.

தொடர்ந்து 'டம்ப் டவர்' மூலமாக சம்பவம் நடந்த நாளன்று ஜெயக்குமாரின் தோட்டத்தை சுற்றிலும் அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை அறியும் சோதனை நடைபெற்றது. அதில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் நாளன்று 5 மணி நேரம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் விபரம் எடுக்கப்பட்டுள்ளது.

அதில் லட்சக்கணக்கான செல்போன் எண்கள் வந்திருப்பதாகவும், சந்தேகப்படும் நபர்களின் எண்களை எடுத்து அவர்களிடம் விசாரிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி இன்று நெல்லை வந்தார். அவர் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு நவ்ரோஜ், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளின் விபரங்களை கேட்டறிந்துள்ளார். மேலும் அந்த விசாரணை அறிக்கையையும் அவர் படித்து அது தொடர்பான விளக்கங்களை கேட்டார்.

இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு நெல்லைக்கு வர உள்ளதாகவும், அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் தியைன்விளை கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமாரின் வீடு மற்றும் தோட்டங்களில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com