

சென்னை:
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பல்வேறு கட்டங்களாக தேர்வான 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு ஒவ்வொரு மாதம் 15-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக மேற்கொண்ட சிறப்பு பணிக்காக, ரேசன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அரசு அறிவித்துள்ளது.
திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய ரேசன் கடை பணியாளர்களுக்கு, குடும்ப அட்டைகளுக்கு தலா 50 பைசா என கணக்கிட்டு ஊக்கத்தொகையை பணியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
களப்பணியாற்றி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது.