சில அரசியல் கட்சி தலைவர்கள் சுயநலத்துடன் பேசி வருகிறார்கள்- ஈஸ்வரன் தாக்கு

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினால் அதை கொ.ம.தே.க. வரவேற்கும். அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது நல்லதல்ல. தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில அரசியல் கட்சி தலைவர்கள் சுயநலத்துடன் பேசி வருகிறார்கள்- ஈஸ்வரன் தாக்கு
Published on

கோவை:

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சின்னியம்பாளையத்தில் நடந்தது.

கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தை எங்களது கோரிக்கையை ஏற்று சின்னியம்பாளையம் வரை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கோவை மாவட்டத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஒருவர் கூட முதலமைச்சரிடம் இந்த கோரிக்கையை வைக்கவில்லை. சென்னை மாநகராட்சி 3-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதுபோல், கோவை மாநகராட்சியை 2-ஆக பிரிக்க வேண்டும்.

வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என சில அரசியல் கட்சி தலைவர்கள் சுயநலத்துடன் பேசி வருகிறார்கள். விளைநிலங்கள் வழியாக கியாஸ் லைன் பதிப்பது விவசாயிகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சியிலும், சீமானிடமும் வித்தியாசத்தை காண முடிகிறது. சீமான் போக்கில் மாற்றம் தெரிகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. அதற்குள் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றியெல்லாம் கேட்கிறார்கள்.

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினால் அதை கொ.ம.தே.க. வரவேற்கும். அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது நல்லதல்ல. தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்களை நிறைவேற்றி கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். பொள்ளாச்சியை புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும். விமானநிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com