

சென்னை:
மிச்சாங் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சட்டசபை துணைத் தலைவர் பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா செழியன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர்களின் ஒரு மாத ஊதியமான ரூ.35,70,000, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 91,34,500 என மொத்தம் 1,27,04,500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்கள்.