

சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னைப் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க பணம் இல்லாததால், ஓய்வூதிய நிதியம் மற்றும் அறக்கட்டளை நிதியை எடுத்து ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரு காலத்தில் ரூ.500 கோடிக்கும் கூடுதலாக உபரி நிதி வைத்திருந்த சென்னை பல்கலைக்கழகம், இப்போது ஊதியத்திற்கு கூட நிதியின்றி தவிப்பதும், அதற்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு மறுப்பதும் கவலையளிக்கிறது.
சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட மாநில அரசின் அனைத்துப் பல்கலைக்ககழகங்களும் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும், அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.