தமிழக மீனவர்கள் 25 பேர் கைது: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மீனவர்கள் 25 பேர் கைது: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்
Published on

நாகப்பட்டினம்:

தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், படகின் உரிமையாளர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர், நாகையன், திவ்யநாதன், மாயவன், பாக்கியராஜ், சக்திவேல், மணிகண்டன், ராமச்சந்திரன், கோதண்டபானி, ராமச்சந்திரன், செல்வமணி ஆகிய 12 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 35 கடல்மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 12 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதைப்போல் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆச்சியம்மாள் என்ற விசைப்படகும் அதில் இருந்த 13 மீனவர்களும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com