என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்
    X

    கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்

    • கொடுமுடி பேரூராட்சியின் தலைவரின் கணவரான சுப்பிரமணியத்தின் தலையீடு பேரூராட்சி நிர்வாகத்தில் அதிகம் உள்ளது.
    • தி.மு.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானபடுத்தினர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியின் தலைவராக தற்போது உள்ளவர் திலகவதிசுப்பிரமணி. இவரது கணவர் பேரூராட்சி நிர்வாகத்திலும், பேரூராட்சிக்கு வரவேண்டிய நிதி ஆதாரங்களிலும் தலையிட்டு பேரூராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதுடன் பேரூராட்சி அலுவலகத்தை தனது விருப்பத்திற்கு பயன்படுத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ராட்சத ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைக்கும் இடமாக பேரூராட்சி வளாகத்தை பயன்படுத்தி வருகிறார்.

    பேரூராட்சியி்ன் தலைவரின் முகவரியிட்டு பேரூராட்சிக்கு வரும் கடிதங்களை தலைவரது கணவர் சுப்பிரமணி பெற்றுக்கொள்வதுடன் மன்றக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு முடிவுகளை எடுக்கசொல்லி நிர்வாகத்தை சீர்குலைக்கிறார். அத்துடன் பேரூராட்சியில் கவுன்சிலர்களாக உள்ளவர்களை மரியாதை குறைவாக நடத்துகிறார் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து அது சம்பந்தமான கண்டனவரிகள் அடங்கிய பதாகைகளுடன் நேற்று 12 கவுன்சிலர்கள் கொடுமுடியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்து காலவரையற்ற போராட்டத்தை துவங்கினர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    கொடுமுடி பேரூராட்சியின் தலைவரின் கணவரான சுப்பிரமணியத்தின் தலையீடு பேரூராட்சி நிர்வாகத்தில் அதிகம் உள்ளது. இதனை கண்டித்து தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 3-ம்தேதி கொடுமுடி பேரூராட்சியின் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் துணை இயக்குனரிடம் மனு அளித்துள்ளோம். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த விஷயத்தை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான முத்துசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம், அவரும் பல முறை இருதரப்பிடமும் பேசிவிட்டார். இருந்த போதும் தலைவரின் கணவர் மாறவில்லை, என்றனர்.

    கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து அறிந்த கொடுமுடி ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானபடுத்தினர். அவர்களிடம் தங்களது முடிவை உறுதிபட தெரிவித்த கவுன்சிலர்கள் கொடுமுடி பேரூராட்சி தலைவரை மாற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துவிட்டு தங்களது போராட்டத்தை நேற்று மாலை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×