முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தற்போது அளித்துள்ளதுதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்
Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (மார்ச் 2) முகாம் அலுவலகத்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன், பிரபாகரன், வைத்திசெல்வன், ஜியோ டாமின், பேராட்டக் குழுவைக் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாத்திமா பாபு, ஹரிராகவன், மகேஷ்குமார், மெரினா பிரபு, சுஜித், குணசீலன், ரீகன், ராஜா, கிதர் பிஸ்மி, அம்ஜித், வசந்தி, சிம்லா, கோபால், வாஞ்சிநாதன், மாரியம்மாள் ஆகியோர் சந்தித்து. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதையொட்டியும். இந்த ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை 22-5-2018 அன்று நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசால் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டதோடு, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தற்போது அளித்துள்ளது தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

இச்சந்திப்பின்போது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோர் உடனிருந்தனர்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com