தமிழ் திரையுலகில் பாலியல் அத்துமீறல்கள் உள்ளன - நடிகை சனம் ஷெட்டி

நடிகை சனம் ஷெட்டி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராட முடிவு. தமிழ் திரையுலகிலும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளதாக சனம் ஷெட்டி தெரிவித்தார்.
Sanam Shetty
Published on

நடிகை சனம் ஷெட்டி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தண்டனை தரக்கோரியும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக காவல் துறை அனுமதி அளிக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சனம் ஷெட்டி மனு அளித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சனம் ஷெட்டி, "பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்து பேச கஷ்டமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பதிவாகி உள்ளன. கொல்கத்தாவில் நடந்த பாலியல் வன்கொடுமைக்காக இங்கு ஏன் போராட வேண்டும் என்று கூறுகிறார்கள்."

"நேற்று கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. இதில் அப்பள்ளியின் முதல்வர் சம்பந்தப்பட்டு உள்ளார். பெங்களூருவில் 21 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. மகாராஷ்டிராவில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது."

"நிர்பயா வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் தண்டனை வழங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்."

"ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரம் எனக்கு தெரியாது. ஆனால் இதை நான் வரவேற்கிறேன். இது போன்று ஒரு அறிக்கையை அவர்கள் கொண்டு வந்ததற்கு ஹேமாவுக்கும், கேரள அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்."

"தமிழ் திரையுலகிலும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் உள்ளன. பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை தமிழ் திரையுலகிலும் உள்ளது. கேரளாவை போன்று தமிழ் திரையுலகிலும் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com