

சேலம்:
சேலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக 3 நபர்களுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்தால் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உடனடியாக தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடைசெய்யப்பட்ட 5 பகுதிகள் இருந்த நிலையில் தற்போது 3 இடங்களாக குறைந்துள்ளது.
இப்பகுதிகளில் கூடுதலாக எந்த நபரும் பாதிக்காத வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை சுகாதார அலுவலர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் முழுமையாக மக்கள் நடமாட்டம் தடை செய்யப் படுவதோடு, தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாநகரில் கொரோனா குறைந்து வருவதால் தடை செய்யப்பட்ட பகுதிகள் 3 இடங்களாக குறைந்து உள்ளது.
32 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனாவுக்கு இதுவரை 306 பேர் உயிரிழந்துள்ளனர் என்றனர்.