முருகனுக்கு சிகிச்சை அளிக்க கோரிக்கை- ஐகோர்ட்டில் மனு தாக்கல்

கடந்த 32 நாட்களாக முருகன் இறைவனை வேண்டி விரதம் இருக்கிறார். முருகன் உடல் எடை 63 கிலோவில் இருந்து 43 கிலோவாக குறைந்துள்ளது. கையும் நடுங்கியுள்ளது.
முருகனுக்கு சிகிச்சை அளிக்க கோரிக்கை- ஐகோர்ட்டில் மனு தாக்கல்
Published on

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் முருகன். இவரது உடல் நலம் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அவரது மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா (வயது 81) மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது மகள் நளினியும், அவரது கணவர் முருகனும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றனர். தற்போது என் மகள் நளினி பரோலில் வெளியில் வந்து வேலூரில் என்னுடன் தங்கி உள்ளார்.

வேலூர் சிறையில் உள்ள என் மருமகன் முருகனை கடந்த 8-ந் தேதி என் வக்கீல்கள் புகழேந்தி, எழிலரசு ஆகியோர் சந்திக்கச் சென்றனர். அப்போது முருகன் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். கடந்த 32 நாட்களாக அவர் இறைவனை வேண்டி விரதம் இருக்கிறார். அதனால், அவரது உடல் எடை 63 கிலோவில் இருந்து 43 கிலோவாக குறைந்துள்ளது. கையும் நடுங்கியுள்ளது. அவரது உயிருக்கு சிறை அதிகாரிகளால் ஆபத்து இருப்பதாக கருதுகிறேன்.

எனவே, அவருக்கு தகுந்த சிகிச்சை வழங்க வேண்டும் என்று உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், சிறை துறை.டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு கடந்த 9-ந்தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். என் மனுவை பரிசீலித்து சிகிச்சையை முருகனுக்கு வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com