ஆன்மிகம் பேசாமல் அரசியல் நடத்த முடியாது என்பதை உணர்த்துகிறது- தமிழிசை

பிரதமர் உக்ரைன் சென்று இருப்பது உலக தலைவர்களுக்கு முன்னுதாரணம்.பள்ளிக்கல்வித்துறை ஏதாவது ஒரு பிரச்சனை நடந்த உடன்தான் நடவடிக்கைகள் எடுக்கிறது.
ஆன்மிகம் பேசாமல் அரசியல் நடத்த முடியாது என்பதை உணர்த்துகிறது- தமிழிசை
Published on

கோவை:

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஆன்மிக பூமி அப்போது அவர் கூறியதாவது:-

பழனியில் இன்று நடக்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆன்மிக பூமிதான். சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசினாலும், ஆன்மிகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது.

தமிழகத்தில் அரசாங்கமே ஆன்மிக மாநாடு நடத்துவது தமிழகம் ஆன்மிகத்தின் பக்கம்தான் என்பதை காட்டுகின்றது. ஆன்மிகத்தை விடுத்து அரசியல் கிடையாது. அரசியலை விடுத்து ஆன்மிகம் கிடையாது என காந்தி கூறியது போல பெரியாரின் கொள்கையை பின்பற்றும் இவர்கள் அண்ணாவின் தமிழை பின்பற்றும் இவர்கள் ஆண்டாளின் தமிழையும் பின்பற்றும் நிலை வரும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

நடிகர் விஜயின் கட்சி கொடியில் இருப்பது வாகை மலரா தூங்குமூஞ்சி மரமா என தெரியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியினர் யானை அவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லி இருக்கிறார்கள். சட்ட ரீதியாக ஒரு சில கருத்துகளை சொல்கிறார்கள். தம்பி விஜய் சட்டரீதியாக அதில் தவறு இருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பிரதமர் உக்ரைன் சென்று இருப்பது உலக தலைவர்களுக்கு முன்னுதாரணம். பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன் என தெரிவித்து இருக்கின்றார். உலக அமைதிக்காக பல நாடுகளில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் நமது பாரத பிரதமருக்கு தான் கொடுக்க வேண்டும்.

பா.ஜ.க., திமுக இடையே எப்போதும் பிணக்கமான சூழ்நிலைதான். கொள்கை ரீதியாக எங்களுக்கும், அவர்களுக்கும் பிணக்கமான கொள்கைதான். திமுகவுடன் கூட்டணி என்பதெல்லாம் நாணய விழாவோடு போய்விட்டது.

அ.தி.மு.க.வால் பா.ஜனதா வெற்றி பெற்றதா? அல்லது பா.ஜனதாவால் அ.தி.மு.க வெற்றி பெற்றதா? என்றால் அது பெரிய விவாதம்.

கூட்டணி என வரும் போது எங்களது உதவி இல்லை என்று சொல்ல முடியாது. எங்களால் மட்டும் தான் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள் என அவர்கள் சொல்ல முடியாது.

இந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய வாக்கு வங்கியை செயலால் நிரூபித்து இருக்கிறோம். அந்த எண்ணிக்கையே பதில் சொல்லும்.

பள்ளிக்கல்வித்துறை ஏதாவது ஒரு பிரச்சனை நடந்த உடன்தான் நடவடிக்கைகள் எடுக்கிறது. போலியாக ஒருவர் என்சிசி கேம்ப் நடத்துகிறார். பாலியல் தொல்லை கொடுத்து குழந்தைகளை துன்புறுத்தி இருக்கின்றார். பள்ளிகல்வித்துறை இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக அரசு எந்த குற்றம் சாட்டப்பட்டாலும் அதில் சில பேர் பலியாகி விடுகிறார்கள். எலி மருந்து சாப்பிடுகிறார்கள், விபத்தில் சிக்குகின்றனர். இது தொடர்பான உண்மை விசாரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com