என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி? சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ உண்மையா?
    X

    பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி? சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ உண்மையா?

    • ‘பிரிஞ்சி' என்ற சைவ பிரியாணி கடைகள்தான் கைகொடுத்து வருகின்றன.
    • ‘பிரிஞ்சி' கடைகளில் ரூ.20, ரூ.30, ரூ.40 என வெவ்வேறு கட்டணங்களில் பிரியாணி பொட்டலம் போட்டு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் குடும்ப செலவுகளை சமாளிப்பதற்காக கணவன், மனைவி என 2 பேரும் வேலைக்கு செல்லவேண்டிய நிலை இருக்கிறது. இதனால் காலையில் வேலைக்கு புறப்படுவது முதல் அலுவலகம், கம்பெனிகளுக்கு சென்றடைவது வரை பெரும்பாலான தம்பதிகள் கடுமையான நேர நெருக்கடியை சந்திக்கிறார்கள். இதுஒருபுறம் இருக்க, பிள்ளைகளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.

    இத்தனை வேலைகளுக்கு இடையே சமையல் செய்வது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த இல்லத்தரசிகள் வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் காலை உணவு சமைத்துவிட்டு, மதிய உணவுக்கு விடுமுறை அளித்துவிடுகிறார்கள். இதுபோன்ற சமயத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான சாலைகளில் புதிது, புதிதாக முளைத்துள்ள 'பிரிஞ்சி' என்ற சைவ பிரியாணி கடைகள்தான் கைகொடுத்து வருகின்றன.

    'பிரிஞ்சி' கடைகளில் ரூ.20, ரூ.30, ரூ.40 என வெவ்வேறு கட்டணங்களில் பிரியாணி பொட்டலம் போட்டு விற்கப்படுகிறது. மிகவும் குறைந்த செலவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பசியாறிவிடமுடியும் என்பதால் பெரும்பாலானவர்களின் பிரதான தேர்வாகவும் இவை இருக்கின்றன.

    இந்தநிலையில், 30 ரூபாய் பிரியாணி சமைப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் இருப்பது பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் காட்சியல்ல. பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வதந்தி பரப்பி வருகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×