என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய மனு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
- ஆளுங்கட்சி தலைவர்கள் விசாரணையில் தலையிட்டுள்ளதால் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.
- சிபிஐ விசாரணை கேட்ட மனுவை ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
மனுவில், ஆளுங்கட்சி தலைவர்கள் விசாரணையில் தலையிட்டுள்ளதால் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சிபிஐ விசாரணை கேட்ட இந்த மனுவை ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து அக்.20-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.






