சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்: கர்நாடகா-தமிழக எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

3 கிமீ தொலைவிற்கு கார்கள், லாரிகள், பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்: கர்நாடகா-தமிழக எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

ஓசூர்:

தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, இன்று போகியுடன் தொடங்கியது. வருகிற புதன்கிழமை (17-ந் தேதி) வரை பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு அரசு விடுமுறை என்பதால், கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் ஓசூர் வழியாக தமிழகத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதலே தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர்.

ஒரே நேரத்தில் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி வழியாக தமிழகத்திற்கு கடந்த 2 நாட்களாக கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் படையெடுத்ததால், ஓசூர் அருகே தமிழக - கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடி முதல் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதி வரை 3 கிமீ தொலைவிற்கு கார்கள், லாரிகள், பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசலால், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலை நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல், ஓசூர் நகர பகுதிகளிலும் நேற்று போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com