19 வருடங்களாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வரும் மக்கள்

பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக நல் உள்ளம் தான்.1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெடி என்பது அறவே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.
19 வருடங்களாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வரும் மக்கள்
Published on

சென்னிமலை:

தீபாவளி என்றாலே அனைவரது நினைவிலும் முன் நிற்பது பட்டாசு தான். தீபாவளி பட்டாசுகள் பல கோடிகள் வரை விற்கப்படுகின்றன. கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை எதற்காக கரியாக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு.

ஆனால் பணம் போனால் போகிறது என்று ரோடு நிறைய குப்பைகள் நிறைய பட்டாசுகளை வெடிப்பவர்களும் ஒரு ரகம். தனக்கென இல்லாமல் மற்றவர்களுக்குக்காக தனது மகிழ்ச்சியை தியாகம் செய்து வாழும் மக்களை காண்பதே அரிது.

மனிதர்களுக்கு உதவிடும் தன்மையே இருந்து கொண்டிருக்கிறது என்று அனைவரும் நினைக்கும் இந்த வேளையில் 5 அறிவு உயிரினங்களை கூட தொல்லை செய்யக்கூடாது என்று பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக நல் உள்ளம் தான்.

அப்படி நல் உள்ளம் படைத்தவர்கள் சென்னிமலை அடுத்துள்ள வடமுகம் வெள்ளோடு கிராம பஞ்சாயத்து உட்பட்ட வி.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரை வழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, கொங்கு நகர், கருங்கங்காட்டு வலசு ஆகிய கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெடி என்பது அறவே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.

இப்படிதான் கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளியை இந்த கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் தான். இந்த வெள்ளோடு மேட்டுப்பாளையம் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு பறவைகள் தங்கி உள்ளது.

அவ்வப்போது வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்லும். அமைதியை தேடி வரும் இங்கு வரும் பறவைகளுக்கு வெடி தொந்தரவாக இருக்க கூடாது என்பதற்காக இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இன்றும் தீபாவளிக்கு பட்டாசு வெடி வெடிப்பதை மக்கள் தியாகம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். ஆனால் வெள்ளோடு சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டும் புத்தாடை அணிந்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடினர்.

சிறுவர்கள் மகிழ்ச்சிக்காக கம்பி மத்தாப்பூ, தரைச க்கரம், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்தனர். இப்பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என வனத்துறை சார்பாக கிராம மக்களுக்கு வேண்டு கோளும் விடப்பட்டுருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com