மெரினாவில் கைப்பற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன

பஞ்சு மிட்டாய் விற்றவர்களிடம் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.ரசாயனம் கலந்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தால் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு, புற்றுநோயாக மாறும் அபாயம் இருக்கிறது.
மெரினாவில் கைப்பற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன
Published on

சென்னை:

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமின் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ரசாயனம் மனிதர்கள் சாப்பிட உகந்தது இல்லை என்பதும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடியது என்றும் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்களை கலவரப்படுத்தி இருக்கிறது.

பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் சதாசிவம், செல்வம், அழகுபாண்டி, கண்ணன் உள்ளடங்கிய அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு, கடற்கரையில் பஞ்சு மிட்டாய் விற்ற அனைவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இதன் மாதிரிகள் கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வு நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் வாங்கிய பஞ்சு மிட்டாய்களை உடனடியாக விற்பனையாளரிடமே கொடுத்து காசு வாங்கி சென்ற சம்பவங்களும் அரங்கேறின. இந்த ஆய்வு மெரினாவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:-

புதுச்சேரி விவகாரத்தை தொடர்ந்து மெரினாவில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளோம். இதில் கைப்பற்றப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமின் பி என்ற உயிர்க்கொல்லி ரசாயனம் இருப்பது தெரியவந்தால், அதை விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகளை சப்ளை செய்தவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். பரிசோதனை முடிவு ஓரிரு நாளில் வெளிவரும்.

இந்த ரசாயனம் கலந்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தால் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு, பின்னர் புற்றுநோயாக மாறும் அபாயமும் இருக்கிறது. சிறுநீரக பிரச்சனைகளை தாண்டி மூளை செயலிழக்கும் அபாயமும் இருக்கிறது. சட்டை, தோல் பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த வகை ரசாயன பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. இயற்கைக்கு மாறான நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com