பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது.தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
Published on

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி எச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, எச்.ராஜா மீது ஈரோடு டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த மாதம் 29-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில், பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்ததாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் எச்.ராஜாவின் வாதத்தை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரின் மனுவை இன்று தள்ளுபடி செய்தனர்

X

Maalai Malar
www.maalaimalar.com