ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்

தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.
வரி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்ட பெண்மணி ருக்மணி
Published on

125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு, ரூ.2.75 கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

125 நாள் வேலை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த புதூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ருக்மணி (வயது 56). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் ஏரி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் 125 நாள் வேலை திட்டத்தில் வந்த கூலி பணத்தை எடுப்பதற்காக நேற்று சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார்.

ரூ.2.75 கோடி வரி ஏய்ப்பு

அங்கு வங்கியில் இருந்த ஊழியர்கள் நீங்கள் ஆர்.எம்.டிரேடர்ஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்துவதாகவும், அதன் மூலம் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.2 கோடியே 79 லட்சத்து 19 ஆயிரத்து 420 வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் ஆம்பூர் வட்ட வணிகவரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது.

அதன்பேரில் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு

இதனால் அதிர்ச்சியடைந்த ருக்மணி, தான் அதுபோன்று தொழில் நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்றும், 125 நாள் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.

125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.75கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com