பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 பேருக்கு வழங்கினார்

7 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.ஒருவருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 பேருக்கு வழங்கினார்
Published on

சென்னை:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள், வியாபாரம் ஆகியவற்றைச் செய்ய குறைந்த வட்டி விகிதத்தில் நிதியுதவி வழங்கி வருகிறது.

அந்த வகையில், தனி நபர்கள் மற்றும் பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக, 7 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

மீதமுள்ள 93 பயனாளிகளுக்கு சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள மகளிர் மேம்பாட்டுக்கழகத்தின் அன்னை தெரசா வளாக கூட்டரங்கில் நடைபெறும் விழாவில், அமைச்சர் ராஜ கண்ணப்பன் கடனுதவிக்கான காசோலைகள் வழங்கினார்.

இத்திட்டத்தின் மூலம், பயனாளிகள் வளையல் வியாபாரம், பால் பண்ணை, ஆடு வளர்ப்பு, பட்டு நெசவு, தையல் தொழில், அழகு நிலையம், பலசரக்கு கடை, உணவகம், துணிக்கடை, தேங்காய் மற்றும் காய்கறி வியாபாரம் போன்ற தொழில்களை மேற்கொள்ள கடனுதவி வழங்கப்படுகிறது. இக்கழகத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக அதிகபட்சமாக நபர் ஒருவருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் காஜா முகைதீன், இயக்குநர் அணில் மேஷ்ராம், ஆணையர் சம்பத் கலந்து கொண்டனர்.

தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழக பயிற்சி நிலையத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சியும், 50 தொழிலாளர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வெ.கணேசன், கலெக்டர் ராகுல்நாத், பாலாஜி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com