தமிழகத்தில் நாளை 1000 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள்- மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
தமிழகத்தில் நாளை 1000 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள்- மா.சுப்பிரமணியன்
Published on

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

குளிர்கால மழை, வெப்பச்சலன மழை, கோடை, தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்திருக்கிறது. தற்போது தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையும் கூடுதலாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் எல்லாத்துறைகளும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்க முதல்-அமைச்சர் வலியுறுத்தி யுள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக அனைத்து சேவைத்துறைகளும் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நோய் பாதிப்பு தடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கிராமத்தில் ஒருவருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அங்கு மருத்துவ முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை (15-ந்தேதி) தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

சேலத்தில் 20 இடங்களிலும், சென்னை யில் 100 இடங்களிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

டெங்கு பாதிப்பால் 2012-ல் 66 பேர் தமிழகத்தில் இறந்துள்ளனர். ஒவ்வொரு 5 வருடத்திற்கும் டெங்கு பாதிப்பு வீரியமாகி வரும் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுத்ததால் பெரிய அளவிலான இறப்புகள் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் தற்போது வரை 8 பேர் டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்பு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. அச்சப்பட தேவையில்லை.

போதைப் பொருட்களை தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 70 லட்சம் மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறோம். ஆன்லைனில் வாங்கப்படும் வலி நிவாரண மாத்திரைகள் போதைக்காக பயன்படுத்துவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com