திருமாவளவன் அவரது கோரிக்கையை தெரிவிப்பதற்காகவே மாநாடு நடத்துகிறார்- அமைச்சர் முத்துசாமி

ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார். உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்த சில நிபந்தனை விதித்துள்ளது.
Muthusamy - Thirumavalavan
Published on

ஈரோடு:

ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் வரும் 24-ந் தேதி வரை 5 பிரிவுகளின் கீழ் நடைபெறுகின்றது. போட்டியில் தமிழகம் முழுவதும் 11.56 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 21,626 பேர் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கையில் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார். அதற்கான பணிகள் தொடக்கப்பட்டுள்ளன. சி.என்.சி. கலை அறிவியல் கல்லூரியில் ஒரு உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு துறை அமைச்சர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

மதுவிலக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு கொள்கை தளர்த்தப்பட்டது. இந்த அரசு காலத்தில் அல்ல அது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதனால் கூட்டணியில் இருந்து கொண்டு அவர் தி.மு.க.வை எதிர்ப்பதாக கருதக்கூடாது.

அவர் அவரது கருத்தை, கோரிக்கைகளை தெரிவிக்க மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு பிரசாரத்திற்கு 5 கோடி ரூபாய் இந்த அரசு ஒதுக்கி உள்ளது. இது படிப்படியாக தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கப்படும்.

உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்த சில நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் மட்டும் தற்போது பெற உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகள், கட்டிடங்கள் குறித்து கண்டறிய மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கீகரிக்கப்படாத பள்ளி கட்டிடங்கள் வரைமுறைப்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com