விளம்பரத்தில் சீன கொடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

ராக்கெட் ஏவுதளம் முதன்முதலில் ஆரம்பிக்க குரல் கொடுத்தது கலைஞரும், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும் தான்.தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் அரசியல் பேசியுள்ளார் என்றார்.
விளம்பரத்தில் சீன கொடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மீனவர்களுக்கான ஒருவார கால இலவச பயிற்சி தொடக்க விழா இன்று காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடந்தது.

விழாவில் தமிழக மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் தி.மு.க. விளம்பரத்தில் சீன தேசிய கொடி இடம்பெற்ற சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், "இந்த விவகாரத்தில் சிறிய தவறு நடந்துவிட்டது. இது தெரியாமல் நடந்த தவறு. அதில் எந்த நோக்கமும் இல்லை. எங்களுக்கு இந்தியாவின் மீது அதிக பற்று இருக்கிறது என்றார்.

ராக்கெட் ஏவுதளம் முதன்முதலில் ஆரம்பிக்க குரல் கொடுத்தது கலைஞரும், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும் தான்.

அதன்பிறகு எங்களுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும் குரல் கொடுத்தனர். அதனால் குலசேகரபட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது.

ஒரு அரசு விழாவில் திட்டத்தையும் பயனையும், புதிய திட்டங்களையும், தொடங்க இருக்கும் திட்டங்களையும் பற்றி பேசுவார்களே தவிர அரசியல் பற்றி பேச மாட்டார்கள். நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் அரசியல் பேசியுள்ளார் என்றார்.

மேலும் தி.மு.க. தனித்து நின்றால் டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்ற அண்ணாமலை கேள்விக்கு பதில் அளித்த அனிதா ராதாகிருஷ்ணன், எங்களது கனிமொழி எம்.பி. மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இதற்கு பதில் கூறியுள்ளார்கள்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com