என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரவுடி நாகேந்திரன் மனைவிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- மனு நீதிபதிகள் ரமேஷ், செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
- அந்த மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.
சென்னை:
வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் (ரெலா) மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, ரவுடி நாகேந்திரன் மனைவி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ், செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் முனியப்பராஜ், இதே கோரிக்கையுடன் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுதாரர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனையடுத்து, ஒரே கோரிக்கையுடன் 2 நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






