

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை, முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்து உள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுசதி, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறப்பு கோர்ட்டு நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்து கூறினார்.
இதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் மறுப்பதாகவும் இது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து இருவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி வழக்கின் சாட்சி விசாரணை வருகிற 31-ந்தேதிக்கு நடைபெறும் என்று கூறி வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.