கலைத் திருவிழா: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெற்றி பெற்ற மாணவர்களில் முதல் 20 பேர் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.மாணவர்கள் இந்த கலைத்திறமையை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.
கலைத் திருவிழா: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு இடையே கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளுக்கான புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்ற 4 மாணவிகளுக்கு "கலையரசி" விருதுகளை வழங்கி வாழ்த்தினார். இதேபோல் 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளுக்கான புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்ற 4 மாணவர்களுக்கு "கலையரசன்" விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, மாணவ, மாணவிகளின் இந்த வெற்றிக்கு அவர்களின் துணிச்சலும், தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் காரணம் என்றும், இதை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

'மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிப்பது, கற்பனைத் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடு பற்றிய பெருமிதத்தையும் மாணவர்களிடையே சேர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பள்ளிக் கல்வித்துறை எத்தனையோ மகத்தான முன்னெடுப்புகளை செய்திருக்கிறது' என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com