தமிழகத்தில் இன்று வெயில் 9 டிகிரி வரை அதிகரிப்பு

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்சென்னை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் வரும் மாதங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்
தமிழகத்தில் இன்று வெயில் 9 டிகிரி வரை அதிகரிப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று வெயில் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களில் 4 டிகிரி முதல் 9 டிகிரி வரை வெயில் அதிகரித்தது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்பு உள்ளது. இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 4 டிகிரி முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரித்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 73 டிகிரி முதல் 90 டிகிரி வரை இருக்கும். நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 99 டிகிரி வெயில் பதிவானது. நாமக்கல்லில் 96 டிகிரி, மதுரையில் 95 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே, வாரணாசி, சிம்லா, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் அனல் காற்றின் விளைவு தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் 2 வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

அதில், 'சென்னை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் வரும் மாதங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வருடத்தில் 97 சதவீதம் நாட்களுக்கு மேல் அதிக சராசரி வெப்பநிலை இருக்கும். இந்தியாவில் பல நகரங்களில் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். சில நகரங்களில் அனல் காற்று ஜூலை வரை நீடிக்கும்' என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com