என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

CSK Vs DC போட்டியைக் காண கட்டணமில்லா பயணம்: சென்னை மெட்ரோ அறிவிப்பு
- நாளை மதியம் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
- அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஏப்ரல் 05, 2025 ஆம் தேதி) நடைபெற உள்ள "IPL 2025" கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் (both Digital & Physical) தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
எந்த மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரெயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் 23:27 மணிக்கு புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:59 மணிக்கும் மற்றும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:44 மணிக்கும் புறப்படும்.
புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.






