விலைவாசி உயர்வு ஒன்றை மட்டுமே தி.மு.க. மக்களுக்கு பரிசாக அளித்து உள்ளது- அண்ணாமலை

517 வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றாது என்பது தெரியும்.2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பது மாநில தலைவராக என்னுடைய ஆசை.
விலைவாசி உயர்வு ஒன்றை மட்டுமே தி.மு.க. மக்களுக்கு பரிசாக அளித்து உள்ளது- அண்ணாமலை
Published on

கோபி:

ஈரோடு மாவட்டத்தில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வரும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று மாலை சத்தியமங்கலத்தில் நடைபயணத்தை மேற்கொண்டார்.

அதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் வந்த அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை தொடங்கினார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. வந்த பிறகு விலை உயர்வு அதிகமாக உள்ளது, பால்விலை மட்டும் ஐந்து முறை விலை ஏற்றியுள்ளனர். மின் கட்டணம் மட்டும் 15 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதம் விலை ஏற்றம் அடைந்துள்ளது. சிறுகுறு தொழிலாளிகளுக்கு 60 சதவிகிதம் வரை கட்டணம் உயர்ந்துள்ளது, பத்திர பதிவு கட்டணம் உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வை ஒன்றை மட்டுமே தி.மு.க. அரசு மக்களுக்கு பரிசாக அளித்து உள்ளது. 517 வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றாது என்பது தெரியும். இந்த ஆட்சியை எப்போது தமிழகத்தில் அகலும், இருள் எப்போது நீங்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

ஏழை ஜாதி இருக்கக்கூடாது என நரேந்திர மோடி விரும்புகிறார். ஆனால் தமிழகத்தில் சனாதானம் இருக்கக் கூடாது இந்து தர்மம் இருக்கக் கூடாது என தி.மு.க.வினர் பேசி கொண்டுள்ளனர். ஊழல் தான் நம் மண்ணில் இருக்கக் கொண்டு கூடிய பெரிய பிரச்சனை. தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் உள்ளனர். அதில் 15 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. 2006-ல் இருந்து 2011 வரை தி.மு.க. அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுள்ளது.

தி.மு.க.வினர் சினிமா படம் தயாரிக்கின்றனர் அதை வெளியிடுகின்றனர். கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். இதனை மக்கள் வெறுக்கின்றனர். இந்த அரசியல் வேண்டாம், இதனை எதிர்த்து நிற்க துடிக்கின்றனர். அதனால்தான் இவ்வளவு கூட்டம் நமக்கு வருகிறது, நடக்கின்ற ஆட்சியை அடியோடு வேறறுக்க வேண்டும் என என் மண் என் மக்கள் யாத்திரைக்கு மக்கள் வருகின்றனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது, ஒரு குழந்தை பிறக்கும்போதே கடனாளியாக பிறகின்றது , அதேபோல குஜராத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போதே 17 ஆயிரம் ரூபாய் லாபத்தில் பிறகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடாந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் புதுவிதமான அரசியலை மக்கள் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு தொகுதிகளிலும் வெளிப்படையாக தெரிகின்றது மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று. மக்களுக்கு இந்த நடைமுறை அரசியல் சுத்தமாக பிடிக்கவில்லை. அதேபோல பாரதப் பிரதமரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி கடை கோடியில் உள்ளவர்கள் வரை சென்றுள்ளது, மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த மாங்காய் மரம் சுவையாக உள்ளதோ அதில் தான் கல் எடுத்து அடிப்பார்கள் என்பதைப் போல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை குறிவைப்பது பேசுவது நல்லது தானே, கல்லடி பட்டு தான் மாங்கா மரம் சுவையான மாம்பழங்களை கொடுக்கின்றது. விமர்சனத்திற்கு எப்போதும் அண்ணாமலை அஞ்சுவது கிடையாது.

அண்ணாமலைக்கு என்று தனிப்பணி அரசியல் உள்ளது. அந்த அரசியலில் நான் ஒரு பெட்டிக்குள் அடங்க விரும்பவில்லை. தமிழகத்தில் முன்பு இருந்த அரசியல்வாதிகள் இதுபோன்றுதான் அரசியல் செய்தார்கள் என்றால் அதனை அண்ணாமலை செய்ய விரும்பவில்லை. என்னுடைய அரசியல் ஒரு மாற்று அரசியல். தமிழகத்தில் நடந்து வரும் எந்த அரசியலும் மக்களுக்கு பிடிக்கவில்லை, நானும் இந்த அரசியலை மாற்றிக்கொள்ளவில்லை,

என்னுடைய கருத்துக்களை ஆக்ரோசமாகவும் உரக்க தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளேன், நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைத்தது கிடையாது.

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் உறுதியாக வளர்ந்துள்ளது அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. இன்னும் பாஜக வேகமாக வளர வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பது மாநில தலைவராக என்னுடைய ஆசை.

அதிமுக கூட்டணி முறிவுக்கு பின் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக யாருடன் கூட்டணி அமைக்கும் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு மக்களோடு கூட்டணி என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com