ஆன்மீக அரசாக தி.மு.க. திகழ்கிறது- தருமபுரம் ஆதீனம் புகழாரம்

அரசு விழாவாக கொண்டாடப்படுவதின் மூலம் இனி அனைத்து தரப்பினரும் சதய விழாவை கொண்டாடுவர். ராஜராஜ சோழனால் தான் நமக்கு திருமுறை பாடல்கள் கிடைத்துள்ளது.
ஆன்மீக அரசாக தி.மு.க. திகழ்கிறது- தருமபுரம் ஆதீனம் புகழாரம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் 1037-வது சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் இன்று காலை கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் வழங்கினார். பின்னர் அவரது தலைமையில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக தருமபுரம் ஆதீனம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழா இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

நான் ஏற்கனவே கூறியபடி ஆன்மீக அரசாக தி.மு.க. திகழ்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். அரசு விழாவாக கொண்டாடப்படுவதின் மூலம் இனி அனைத்து தரப்பினரும் சதய விழாவை கொண்டாடுவர். உலகம் முழுக்க புகழ் கிடைக்கும்.

ராஜராஜ சோழனால் தான் நமக்கு திருமுறை பாடல்கள் கிடைத்துள்ளது. 12 திருமுறைகளில் உள்ள 18 ஆயிரம் பாடல்களை செப்பேடு, ஓலைச்சுவடிகளில் பதிவிட்டு வருகிறோம். தற்போது கை பிரதிகளாக அச்சிடப்பட்டு வருகிறது. மேலும் செல்போனில் செயலி மூலமும் வெளியிடும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com