

ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை என்று டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் அர்லேகர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார்.
இந்த விழாவில், முதலில், வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ் தாய்க்கான வாழ்த்துப் பாடல் பாட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்து இருந்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
இதேபோல் இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், காவல்துறை ஆலோசனைக்கூட்டம் மற்றும் அலுவலக பணி காரணமாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றும் ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை என்றும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.