வேளாண் நிலங்களை பறிக்கும் முடிவை கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கிராமசபைக் கூட்டங்களில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் எடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்களை மக்கள் நிறைவேற்றியுள்ளனர்.என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.
வேளாண் நிலங்களை பறிக்கும் முடிவை கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடி வரும் கடலூர் மாவட்ட மக்களும், உழவர்களும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தடைகளை தகர்த்து என்.எல்.சி சுரங்க நிலப்பறிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கிராமசபைக் கூட்டங்களில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் எடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்களை மக்கள் நிறைவேற்றியுள்ளனர். அதற்கும் கூட அதிகாரிகள் மூலம் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் தகர்த்து தான் கடலூர் மாவட்ட மக்கள் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றனர்.

கடலூர் மாவட்ட மக்களும் தமிழ்நாடு அரசின் ஆளுகைக்குள் உள்ளவர்கள் தான். அவர்களைக் காக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. எனவே, கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், உடல் நலனையும் கருத்தில் கொண்டு, கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கேட்டுக்கொள்ளப்பட்டவாறு, என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது; அதற்காக நிலம் கையகப்படுத்தி தரமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com