அரசியலமைப்பு தினம்: மக்களின் உரிமைகளை பாதுகாத்திடுவோம்- மு.க.ஸ்டாலின்

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது.
அரசியலமைப்பு தினம்: மக்களின் உரிமைகளை பாதுகாத்திடுவோம்- மு.க.ஸ்டாலின்
Published on

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று சம்விதன் திவாஸ் என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில அரசியலமைப்பு தினமாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

என்றும் பரிணமித்துக் கொண்டிருக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது.

அரசியலமைப்புச் சட்ட முகப்புரையை வாசித்து, அதில் கூறப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்களையும் - அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்ட முகப்புரையை வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் உள்பட அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்பட அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து துறைகள், ஐகோர்ட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து துறைகளின் தலைமை அலுவலகங்களிலும் துறைகளின் தலைவர்கள் சட்ட முகப்புரையை வாசித்தனர்.

இதே போல் பள்ளி, கல்லூரிகளிலும் வாசித்தனர். வாசிக்க வேண்டிய முகப்புரையை அரசு அனைத்து துறைகளுக்கும் அனுப்பி இருந்தது. அதன் விவரம் வருமாறு:-

இந்திய மக்களாட்சிக்கு இது பெருமைமிகு தருணமாகும். நமது அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் 75 ஆண்டுகாலம் பயணித்து. நாட்டின் ஒருமைப்பாட்டையும் கூட்டாட்சிக் கட்டமைப்பையும் எல்லாத் தருணங்களிலும் அப்படியே தக்க வைத்திருக்கிறது. இத்தருணத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நம் முன்னோர்களின் பேரறிவுக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் நாம் வணக்கம் செலுத்துவோம். வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க அவர்கள் கண்ட கனவுகளுக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் ஏற்பப் பயணிப்போம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மிக உயரிய விழுமியங்களைக் கடைப்பிடிக்க நாம் பாடுபடுவோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com