

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட புதிய கலெக்டராக பிரபு சங்கர் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை கலெக்டர் பிரபு சங்கர் திருவள்ளூர், பஜார் அருகே உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது முதல் அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். மேலும் கலெக்டர் பிரபுசங்கர் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார். மேலும் உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிக்கு கொண்டு செல்லும் முறை மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும் விதம், பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்ளின் வருகை மற்றும் படிப்பு குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, கூடுதல் கலெக்டரும் திட்ட இயக்குனருமான சுகபுத்திரா, நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, சுகாதார அலுவலர் கோவிந்த ராஜு, தலைமை ஆசிரியர்கள் சிவரணி, பூங்கோதை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.