என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: பொதுமக்கள் பார்வைக்கு இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர்
- 3 ஆயிரத்து 336 சதுர அடி பரப்பளவில் உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது.
- நவீன தொழில்நுட்பம் மற்றும் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டு உள்ள வள்ளுவர் கோட்டம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
சென்னை:
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டம் 1974-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது.
சுற்றுலா மையமாக திகழ்ந்து வரும் வள்ளுவர் கோட்டம், உலகத் தமிழ் அறிஞர்களாலும், தமிழ்நாட்டு மக்களாலும் பெரிதும் பாராட்டப்படும் பெருமைக்குரிய ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வள்ளுவர் கோட்டத்தின் முன்பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அவரது பிறந்தநாளின்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றபோது, வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.
அப்போது, பராமரிக்கப்படாமல் பாழ்பட்டிருந்த வள்ளுவர் கோட்டத்தின் தோற்றத்தை பார்த்து வேதனை அடைந்தார்.
இதைத்தொடர்ந்து, வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க உத்தரவு பிறப்பித்த மு.க.ஸ்டாலின், இந்த பணிக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்தார்.
அதன்படி, வள்ளுவர் கோட்டத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கி நடந்தது. 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஆயிரத்து 548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான 'அய்யன் வள்ளுவர் கலையரங்கம்' தமிழ் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தகுந்த வகையில் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது.
கருணாநிதியின் உரை விளக்கத்துடன் 1,330 திருக்குறள்களையும் கொண்ட குறள் பலகைகள் அமைக்கப்பட்டு ஓவியங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ளது 'குறள் மணிமாடம்'.
100 பேர் அமரும் வசதியுடன் 'திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம்' இலக்கிய விவாதங்கள் ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
27 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், தரைத் தளத்தின் கீழ் பகுதி ஆகியவற்றில் 162 கார்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்து 336 சதுர அடி பரப்பளவில் உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது.
உணவகத்தில் ஒரே நேரத்தில் 72 பேரும், காபி அருந்தும் பகுதியில் 24 பேரும் அமரும் வகையில் இந்தக்கூடம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் அருகே நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அமைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளுவர் சிலையை நோக்கி பார்வையாளர்கள் தடையின்றி செல்வதற்கு வசதியான மூடிய நடைபாதையுடன் கூடிய 'வேயா மாடம்' ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
திருவாரூர் தேர் வடிவில் 106 அடி உயரமுள்ள திருக்குறள் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ள கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது. இசை நீரூற்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.
நவீன தொழில்நுட்பம் மற்றும் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டு உள்ள வள்ளுவர் கோட்டம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
புதுப்பிக்கப்பட்டு உள்ள இந்த வள்ளுவர் கோட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து, இங்கு முதல் நிகழ்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்து நடத்தும் பாராட்டு விழா நடக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் 13 ஆயிரத்து 988 மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கியது உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா மாற்றுத்திறனாளிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.






