

சென்னை:
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதற்கேற்ற வகையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் உள்ளிட்ட சில நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.
மேலும், தமிழகத்திற்கு உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டு தொடக்க விழா மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் நடைபெறுகிறது.