'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் அமலுக்கு வருகிறது- கலெக்டர்கள் 24 மணிநேரம் பணியாற்ற வலியுறுத்தல்

‘மக்களிடம் செல்’ என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும்.தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களை சென்னைக்கு அழைத்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் அமலுக்கு வருகிறது- கலெக்டர்கள் 24 மணிநேரம் பணியாற்ற வலியுறுத்தல்
Published on

சென்னை:

தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் ஒரு நாள் கிராமங்களில் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

"அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகிறதா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றதா? என்பதை களத்திற்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு எந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம்.

இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் கூறுகையில்,

"மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு எந்திரத்தின் முதன்மையான பணி. அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப் பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்றும் ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும் அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சித் தலைவர் தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

"தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களைப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்திருந்த முதலமைச்சர் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்," என்று தெரிவித்து இருந்தார்.

இது, 'மக்களிடம் செல்' என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும், ஒரு நாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறை களை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களிடம் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

நானும், அரசு எந்திரமும் களத்திற்கு வருகிறோம். குறைகளை கேட்டு, மக்களின் கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்று தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் நாளை முதல் மாவட்ட கலெக்டர்கள் வட்ட அளவில் நேரடியாக கிராமத்துக்குச் சென்று 24 மணி நேரம் தங்கியிருந்து மக்களின் கருத்துக்களை கேட்டு அறிய உள்ளனர்.

இது தொடர்பாக இன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களை சென்னைக்கு அழைத்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com