

கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட மத்திய ஐல்சக்தி அமைச்சகம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஆகியவற்றிற்கு உத்தரவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாடு மாநிலம் இயல்பாகவே மேற்பரப்புநீர் வளங்களில் பற்றாக்குறை கொண்டதாகவும், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களைச் சார்ந்தே உள்ளது.
மாநில அரசினால் தொடர்ச்சியான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டும் அளவிற்குப் பயன்படுத்தப்பட்டு, பல பகுதிகளில் அது அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நிலை தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,
தமிழ்நாட்டின் மேற்பரப்புநீர் வளங்களைப் பெருக்குவதற்கான மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாகக் குண்டாறு இணைப்புத் திட்டம் திகழ்கிறது. என்றும், தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான அதிகரித்துவரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை தொடர்ந்து கடுமையான நீர்ப் பற்றாக்குறையுடனும், வறட்சியாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகவும் அம்மாவட்டங்களின் அதிகரித்துவரும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மிகச்சிறந்த நிரந்தரமானத் தீர்வாக கோதாவரி - காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியமென்றும், இத்திட்டத்தினால் வெள்ள உபரிநீரை நீரை பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் திருப்பிவிட வழிவகுப்பதாய் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இப்பெரிய திட்டத்தின் முதற்கட்டமாக, தேசிய நீர் மேம்பாட்டு முகமை, கோதாவரி - பெண்ணாறு -பாலாறு - வெள்ளாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள விஜய், இந்திட்டத்தினால் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குப் பயனளிக்கும் என்றாலும், தற்போது தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் உள்ள சீரமைப்பு வழியானது காவிரி ஆற்றிற்கு சில கிலோமீட்டருக்கு முன்னதாகவே முடிவதால் அதற்குப் பதிலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி- காவிரி -குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளுமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, தேசிய நலனைக் கருத்தில்கொண்டு, ஆக்கப்பூர்வமான கலந்தாலோசனை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கருத்துவேறுபாடுகளைத் தீர்த்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதில் தாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகப் பொருளாதார நன்மைகளைக் கருத்தில்கொண்டு, கோதாவரி -காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட, அதற்கு 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்" என்ற அந்தஸ்தை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒருங்கிணைந்து செயல்படுத்துதல், உத்திரவாதமான நிதி ஒதுக்கீடு மற்றும் குறித்த காலத்தில் திட்டத்தை முடிப்பது ஆகிய நோக்கத்திற்காக ஒன்றிய அரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்களின் பங்கேற்புடன் ஒரு பிரத்யேக சிறப்பு நோக்கு அமைப்பை (Special Purpose Vehicle) உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும் என்றும், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை விரைவாகவும், வெற்றிக்கரமாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு அர்ப்பணிப்புடன் அனைத்து ஒத்துழைப்பும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும், தேசிய மேம்பாட்டு முகமைக்கும் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய பயன்பெறும் மாநிலங்களுடன் ஆலோசனைகளை விரைவுபடுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளில் விரைவான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.
காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளைக் கதவணை வரை இந்த இணைப்பை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்யவேண்டும்.
இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக விரைவான முறையில் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தல் மற்றும்
இத்திட்டத்தை ஒருங்கிணைந்த மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்திட ஒரு சிறப்பு நோக்கு அமைப்பை நிறுவுவது குறித்துப் பரிசீலிப்பது மற்றும் இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்தல்
இத்திட்டம் தொடர்பாக பிரதமர் தனிப்பட்ட கவனம் செலுத்தி தென்னிந்தியாவின் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நமது சிறப்பான நீர் வளங்களைச் சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவது என்ற தேசிய குறிக்கோளை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.