

மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளச்சேரியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து மற்ற ரேஷன் கடைகளிலும் காலை 10.15 மணி முதல் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே சமயம் டோக்கன் கிடைக்காதவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ஆகியோரும் வெள்ள நிவாரண தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நிவாரண தொகைக்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.