மாதந்தோறும் ரூ.1000.. தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும்.இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.360 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் ரூ.1000.. தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி அரசு பள்ளிகளில் படித்து விட்டு பின்னர் உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9-ந் தேதி) காலை 11.15 மணிக்கு கோவையில் தொடங்கி வைக்கிறார்.

கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இதற்கான பிரமாண்ட விழா இன்று நடைபெறுகிறது.

இந்த திட்டத்தில் தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதன்மூலம், 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.360 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். முதலமைச்சர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் திரளானோர் கூடி அவருக்கு வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம், கோவை அரசு கலைக்கல்லூரி மைதானம், உக்கடம், கணியூர் மற்றும் அவர் காரில் வந்து செல்லும் இடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com