

நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.