ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்: விசிகவின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும் - திருமாவளவன்

எந்த தலித் இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர் நிலையில் வைத்து அணுகியது இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாம். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தலாம்.
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்:  விசிகவின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும் - திருமாவளவன்
Published on

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறும் என இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 'ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர்," கூலி வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற அரசியல் அறியாமையில் உலவுகிற சில அற்பர்கள், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு என்பதை, விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை இயக்கத் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிற நிலையில் நாம் அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்க கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது.

ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும், யாரோடும் இணைந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யாரும் வந்து நம்மை அழைக்கலாம், இணைந்து செய்யலாம் என்று குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அவர்கள் திமுகவுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதனை திமுக எதிர்கொள்ளும் அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எல்லாவற்றிலும் நம்மை இணைத்து, இழுத்து, வம்பு இழுத்து விமர்சனங்களை செய்கிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. எந்த தலித் இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர் நிலையில் வைத்து அணுகியது இல்லை.

நம்மை வேண்டுமென்றே ஏதோ சொந்த புத்தி இல்லை, சொந்த கால் இல்லை என்பதைப் போல சில அற்பர்கள் அவதூறுகள் பரப்பி இருக்கிறார்கள். இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. நம்மை வைத்துக்கொண்டு நம்முடன் நின்று கொண்டு திமுக கூட்டணிக்கு எதிராக திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் கும்பல் ஏராளம் இருக்கிறார்கள்.

எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாம். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தலாம்.. போராட்டங்களை நடத்தலாம்.. இதனை நான் ஒரு வேண்டுகோளாக உங்களுக்கு வைத்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். இது நம்முடைய கட்சியின் தனித்துவத்தை எந்த விதத்தையும் பாதித்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்வில் இந்த கருத்தை நான் வைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com