2000 ஏக்கரில் புது விமான நிலையம்: பரந்தூர் பரபரப்பே ஓயல.. ஓசூரிலுமா..?

இடம் தேர்வு செய்யப்பட்டு, கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2000 ஏக்கரில் புது விமான நிலையம்: பரந்தூர் பரபரப்பே ஓயல.. ஓசூரிலுமா..?
Published on

தமிழ்நாட்டின் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இந்த விமான நிலையம் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

முன்னதாக சென்னையின் 2-வது விமான நிலையத்தை கட்டுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதற்காக காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு அவற்றை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

எனினும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியதில் இருந்தே மனு அளித்து வந்த கிராம மக்கள், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கும் இந்த விமான நிலையத்துக்கான பணிகள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமலே உள்ளது. இந்த நிலையில், ஓசூரில் புதிய விமானம் நிலையம் கட்டுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

விமான நிலையம் பற்றிய அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், இதற்காக இடம் தேர்வு செய்வது, அதனை கையகப்படுத்துவது என அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியாகும். அதிக தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக ஓசூர் இருக்கிறது.

எனினும், ஓசூரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்களே அங்குள்ள நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், 2 ஆயிரம் ஏக்கரில் ஓசூரை சுற்றி எத்தனை கிராமங்கள் இடம்பெறும், அந்த கிராமங்கள் எவை என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

நிலம் தேர்வானதும், அங்குள்ள மக்கள் வேறொரு இடத்திற்கு செல்ல வலியுறுத்தப்படுவர். இது தொடர்பாக மக்களுக்கு நோட்டீஸ் வழங்குவது, பத்திரிகை செய்தியாக தெரிவிப்பது போன்ற நடைமுறைகள் அரசு சார்பில் பின்பற்றப்படும்.

இதைத் தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறையை சேர்ந்த நில எடுப்பு அதிகாரிகள் தனியே நியமிக்கப்படுவர். இவர்களை வைத்து நிலம் கையகப்படுத்தப்படும். மாநிலத்திற்கு புதிய விமான நிலையம் கட்டுவதில் அரசு இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதை அரசு எப்படி கையாளும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில், ஓசூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பு அந்த மாவட்ட மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com