

கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு 101 வயது. சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர். 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
அச்சுதானந்தன் ஒரு உண்மையான மகத்தான தலைவர். தோழர் அச்சுதானந்தன் கேரளாவின் அரசியல் மனசாட்சியில் ஆழமாகப் பதிந்த ஒரு புரட்சிகர மரபை விட்டுச் செல்கிறார்.
அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் ஒரு உண்மையான மகத்தான தலைவரின் இழப்பால் துக்கப்படும் கேரள மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்.
எனது சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் மகத்தான தலைவருக்கு, அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்துவார்.
ரெட் சல்யூட்
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதில் பதிவிட்டுள்ளார்.