பாபநாசத்திற்கு 1,433 கனஅடி நீர்வரத்து: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது

இரவில் பெய்த கனமழையால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.அணைகளை பொறுத்தவரை அதிகபட்சமாக குண்டாறில் 48 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
பாபநாசத்திற்கு 1,433 கனஅடி நீர்வரத்து: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது
Published on

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது.

நெல்லை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான களக்காடு, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கன்னடியன் கால்வாய் பகுதிகளில் கனமழை கொட்டியது. அந்த பகுதியில் அதிகபட்சமாக 8.4 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. அம்பை, வி.கே.புரம், ஊர்காடு, கல்லிடைக்குறிச்சி, சிவந்திபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

அம்பையில் அதிகபட்சமாக 52 மில்லிமீட்டர் மழை கொட்டியது. ராதாபுரம், சேரன்மகாதேவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவில் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 49.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சேர்வலாறில் 27 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 991 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு பெய்த மழையால் நீர்வரத்து 1433 கனஅடியாக அதிகரித்தது.

இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 110.80 அடியாக உயர்ந்துள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 121 அடியாக இருந்த நிலையில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 124.87 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 3/4 அடி உயர்ந்து 77.80 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 593 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணை பகுதிகளில் மழை இல்லை.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி ஆகிய இடங்களிலும் இரவில் பலத்த மழை பதிவாகியது. இரவில் பெய்த கனமழையால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இன்று அதிகாலை வரையிலும் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய இடங்களில் தலா 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

அணைகளை பொறுத்தவரை அதிகபட்சமாக குண்டாறில் 48 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. அடவிநயினார் அணை பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடனா மற்றும் ராமநதியில் தலா 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடனா நதி நீர்மட்டம் 77.30 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 78 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 79 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணை நிரம்ப இன்னும் 5 அடி நீரே தேவை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com