18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உடனடியாக தீர்வு காணவேண்டும் - செ.கு.தமிழரசன்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார். #MLAsDisqualified #Tamilarasan
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உடனடியாக தீர்வு காணவேண்டும் - செ.கு.தமிழரசன்
Published on

வாலாஜா:

இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் ராணிப்பேட்டையில் நிரூபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பிற சமுதாய மக்களிடம் உள்ளது. பஞ்சமி நிலம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இது குறித்த விவரங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த விவரங்களை வழங்காமல் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருகிறது. உடனடியாக தமிழக அரசு, மாநில மீட்பு ஆணையத்தை உருவாக்கி பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பின்னடைவு காலி பணியிடங்களை சிறப்பு பணி நியமனம் மூலம் தலித் மக்களுக்கு வழங்க ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. 3 வருடங்கள் ஆகியும் இது நிறைவேற்றப்படவில்லை. சிறப்பு நியமனம் மூலம் இந்த பணி இடங்களில் தலித் மக்களை அரசு நியமிக்க வேண்டும்.

ஜவ்வாதுமலை, ஏலகிரி மலை பகுதிகளில் போலி சான்றிதழ்கள் பரவி வருகிறது. தகுதியானவர்களுக்கு அவரவர் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்பு அதிகாரம் பெற்ற ஆதிதிராவிடர் நல ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் நிர்வாக பங்கீட்டில் தலித் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே வழங்க வேண்டும். நீட்தேர்வு அவசியமில்லை. இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரியான கல்வி திட்டம், ஒரே மாதிரியான பாடத்திட்டம் வேண்டும்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். தமிழக காவல்துறை தற்போது செயலற்று உள்ளது. நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. தமிழக அரசை மத்திய அரசு பின்னால் இருந்து இயக்குகிறது என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #MLAsDisqualified #Tamilarasan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com