

தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் சிவசக்திகாலனி பகுதியை சேர்ந்த 16 வயதான 10-ம்வகுப்பு மாணவி இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து அங்குள்ள மறைவான பகுதிக்கு சென்றார். அப்போது இதனை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த கோழிக்கறி கடையில் வேலைபார்க்கும் வாலிபர்கள் 2பேர் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
மாணவி சத்தம் போடவே, வாலிபர்கள் பலாத்கார முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அழுதவாறு வீட்டிற்கு வந்த மாணவியிடம் உறவினர்கள் நடந்த விவரத்தை கேட்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே மாணவியை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவியின் பெற்றோர் கோவையில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தளவாய் பட்டினத்தில் உள்ள தனது பாட்டி மற்றும் சித்தியின் அரவணைப்பில் மாணவி வளர்ந்து வந்தார். மகளுக்கு நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருப்பூருக்கு விரைந்து வந்தனர். மேலும் தாராபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதாமணி விசாரணை நடத்தி வாலிபர்கள் 2 பேரையும் தேடி வருகின்றார்.