

மதுரை:
மதுரை விளாங்குடி அருகே கரிசல்குளம் சமுதாயக்கூடம் அருகே கருவேலம் மரங்களுடன் புதர்மண்டிக்கிடக்கிறது. இந்த பகுதியில் வெட்டுக்காயங்களுடன் வாலிபர் பிணம் கிடப்பதாக கூடல்புதூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று, வாலிபரின் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரித்தனர். இதில் அவர் கூடல்புதூர் சொக்கலிங்கநகர் 7-வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரவீன்குமார்(வயது 21) என்பதும், நேற்று காலையில் நண்பர்களை பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து, பிரவீன்குமாரை கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர்.
பிரவீன்குமாரின் தாய், தந்தை இருவரும் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். பிரவீன்குமார் பிளஸ்-2 படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றி திரிந்து உள்ளார். முன்விரோதம் அல்லது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறினால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.