காட்டாங்கொளத்தூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

காட்டாங்கொளத்தூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

வண்டலூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள காவனூர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் வீரா (வயது 25). சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்பவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 1-ந் தேதி சிலிண்டர் வினியோகம் செய்த பணத்தை தன்னுடன் பணிபுரியும் நண்பர் ராஜனிடம் அலுவலகத்தில் உள்ள மேலாளர் சுகுமார் என்பவரிடம் கொடுத்து விடும்படி கூறியுள்ளார். அந்த பணத்தை ராஜன் கியாஸ் ஏஜென்சி மேலாளர் சுகுமாரிடம் கொடுத்த போது அதை வாங்குவதற்கு மறுத்துவிட்டார். வீராவை வந்து நேரில் தர சொல்லு என்று கூறியுள்ளார்.

இதையடுத்து வேறு ஒரு நபரிடம் கூறி சுகுமாரிடம் பணத்தை ஒப்படைத்தார். இதையடுத்து அலுவலகத்திற்கு நேரில் சென்ற வீரா, நான் கொடுத்து அனுப்பிய பணத்தை வாங்குவதற்கு ஏன் முதலில் மறுத்தாய் என்று கேட்டார். அப்போது கியாஸ் ஏஜென்சி மேலாளர் சுகுமாருக்கும், வீராவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை வீரா வீட்டில் இருக்கும்போது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர் வீடு காலி செய்வதற்கு சரக்கு ஆட்டோ வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனையடுத்து வீரா தனது சரக்கு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு பொத்தேரி அவ்வையார் தெருவுக்கு சென்றார்.

கியாஸ் ஏஜென்சி மேலாளர் சுகுமார் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து வீராவை வழிமறித்து சரமாரியாக வீச்சரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இதில் வீரா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com